(BBC)
கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தாம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தம் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு கத்தார் செளதி அரேபியா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை சுமூகமாக்க அப்போது பேச்சுவார்த்தை நடத்தியவர்களில் முதன்மையானவர் கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா பின் அலி அல் – தனி. அவர்தான் இப்போது தாம் சிறைவைக்கப்பட்டிருப்பதாக யூ-டியூப் வழியாக தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த யூ-டியூப் வீடியோ பதிவில் அவர், தம்மை அபுதாபி இளவரசர்தான் தடுத்து வைத்திருப்பதாகவும், தமக்கு ஏதேனும் நடந்தால் அவர் தான் `முழுப் பொறுப்பு` என்றும் கூறி உள்ளார்.
ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
உபசரிப்பு அல்ல… தடுத்து வைப்பு
ஒரு சாய்வு நாற்காலில் அமர்ந்து கேமிராவைப் பார்த்து நேரே பேசும் அந்த வீடியோவில் அவர், “நான் இப்போது அபுதாபியில் இருக்கிறேன். என்னை அபுதாபி இளவரசர் ஷேக் முகமது விருந்தாளியாக அழைத்திருந்தார். ஆனால், உண்மையில் நான் இங்கு விருந்தாளியாக இல்லை. தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறேன். அவர்கள் என்னை எங்கும் செல்லக் கூடாது என்று தடுத்து வைத்திருக்கிறார்கள்.” என்று உள்ளார்.
அபுதாபி கல்வித் துறை தலைவர் ஷேக் அலி ரஷீத் அல் நுவைமி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
ட்விட்டரில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஷேக் அப்துல்லா சுதந்திரமாகதான் உள்ளார். அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று கூறியுள்ளார்.
The post சிறை வைக்கப்பட்டுள்ளாரா கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்? appeared first on Sri Lanka Muslim.